புதுடெல்லி :
மத்திய அரசு விரைவில் ரெயில் கட்டணத்தை கணிசமான அளவுக்கு உயர்த்த முடிவு செய்த நிலையில் பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியதும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.
இதையடுத்து பயணிகள் ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரையை பிரதமர் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளது. அதில், “பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே மத்திய அரசு விரைவில் ரெயில் கட்டணத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ராஜ்தானி, சதாப்தி, தூராந்தோ ரெயில்களில் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு காலை உணவு கட்டணம் ரூ.140, மதியம் மற்றும் இரவு உணவு கட்டணம் ரூ.245 ஆக உயர்த்தப்பட்டது. அதுபோல 2-வது வகுப்பு பயணிகளுக்கு காலை உணவு கட்டணமாக ரூ.105, மதிய, இரவு உணவு கட்டணமாக ரூ.185 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. மோடி ஒப்புதல் வழங்கியதும் விரைவில் கட்டண உயர்வு விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.